Showing posts with label எனது கவிதைகள். Show all posts
Showing posts with label எனது கவிதைகள். Show all posts

Friday, 13 September 2013

விநாயகரின் கதறல்!



சாமிதானே நானு
என்னை ஏண்டா
சமுத்திரத்தில
கரைக்கிற...?

வண்டியில ஏத்துற
ஊரச் சுத்துற
சாஸ்த்திரமுன்னு சொல்லி
என்னை சாகடிக்கிற...

கும்பிட்ட சாமிய
குட்டையில குழப்பற...
நம்பியிருந்த என்னை
நட்டாத்தில கரைக்கிற...

எங்கயோ செஞ்சத
இங்கேயும் செய்யற...
இங்கே இல்லாதத
ஏண்டா செய்யிற...?

பூதமாடா நானு
என்னை ஏண்டா
இப்படி
போட்டு உடைக்கிற...?

சாமிதானே நானு
ஏதுக்கடா
என் கண்ண குத்துற...?

இனி...
நீ
கும்பிடாத
நான்
கும்பிடுறேன்
என்னை விட்டுடு!


-தோழன் மபா

Friday, 23 August 2013

பசியடங்கா மனிதன்!





   நீ
நேற்றுவரை
துள்ளித் திரிந்திருப்பாய்.

ஓடி
விளையாடியிருப்பாய்.

மிட்டாய்க்காக
முகம் மலர்ந்திருப்பாய்.

இன்றுன்னை
கொன்றதாரென்று
அறிந்திருப்பாயா....?

ரசாயனக் குண்றென்றார்
விஷவாயுவென்றார்.
அரசு ராணுவமென்றார்
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்

கொன்றது
எப்படியாயினும்
யாராகினும்
கொல்லப்பட்டது
நீதானே....?

மனிதன் தின்ற
மழலைகள்
மாமிசம்
என்றேன் 
நான்.

இன்னும்
பசியடங்கா
மனிதன் -இருந்தால்
வரலாம்
சிரியாவுக்கு!

-தோழன் மபா.

சிரியா  டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் கொல்லப்பட்ட மழலைகள். இத் தாக்குதலில் சுமார் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். விடியற்காலையில் இத் தாக்குதல் நடந்துள்ளதால் எல்லோரும் படுக்கையிலே பிணமாயினர்.

Friday, 10 May 2013

வெட்டவெளி







குவளையில்
நிறைந்திருக்கும்
நீரின் மீது
மீண்டும் மீண்டும்
ஊற்றும்
தண்ணிரை
... போல்

காய்ந்து கருகிய
நிலையில் இருக்கும்
எங்கள் மீது...

உக்கிரமாகவும்
கருனையின்றியும்
பெய்துக் கொண்டு
இருக்கிறது
வெயில்.

'படமும் கவிதையும்'
-தோழன் மபா

Sunday, 14 April 2013

தையா...? சித்திரையா...?



தையா...?
சித்திரையா...?
இன்னும் குழப்பம் தீரவில்லை

தெளிவில்லாத தீர்வால்
தாமறை இலை
தண்ணீராய் இருக்கிறது மனது.

கொண்டாடவும் முடியவில்லை.
குதுகளிக்கவும் வழியில்லை.

எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!

பாரம்பரியமும்
பரிதவிப்பும்
கொண்டதா-எம்
தமிழினம்?

வந்தோரெல்லாம்
தலையில் கை வைக்க
தமிழ் என்ன
தகப்பன் இல்லாத
பிள்ளையா...?


ஆட்சி மாறினால்
வருடப் பிறப்பும் மாறுமா...?
உனக்கு தை
எனக்கு சித்திரையென்று....?

தமிழன் என்ன
எடுப்பார் கைபிள்ளையா...?

என்ன
பிறப்படா நாம்...?

இவர்களிடம்
சிக்கிக்கொண்டோம்
சிந்திக்கத் தெரியாமல்
சிக்கிக்கொண்டோம்.

தையா...?
சித்திரையா...?

எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!

-தோழன் மபா.
14/04/2013.

Wednesday, 3 April 2013

ஆதலினால்....காதலை ரத்து செய்வோம்!



 1
னக்காக -என்
உயிரைக் கூடத்
தருகிறேன்.

அதற்காக -என்
மானத்தை
விலை பேசாதே....?!

வேண்டுமானால்

நம்
காதலை
ரத்து செய்துக்கொள்வோம்!.


-தோழன் மபா.
என் கல்லூரி காலத்தில் நான் எழுதிய கவிதைகள். (1992-1995)

Saturday, 29 December 2012

மலத்தில் ஊறும் சாதி!






வெள்ளை வெளேர்
சட்டை
தும்பைப்பூ
வேட்டி

கையில் காஸ்ட்லி
மொபையில்
கக்கத்தில்
ஐபார்ட்

இருந்தும்
காலத்தை
கடந்து...

அவனுள்
மலம் போன்றே
ஊறிக்கிடக்கிறது.

சாதி.


(200 வருடங்களுக்கு முன்பு  இதே போன்றதொரு சாதிய தாக்குதல் தர்மபுரி பகுதியில் நடந்துள்ளது)


Friday, 3 February 2012

கடிதங்களின் பிணங்கள் !

    


                                                                                   மிக நீண்டதொரு
                                                                                   இரவு

                                                                                   அதன்
                                                                                   வெளிச்சங்கள்
                                                                                   இருட்டினுல் அமிழ்ந்து
                                                                                   அழுகையை வெளியிட்டன...

                                                                                   இரவின் யாருமற்ற
                                                                                   தெருவெளியில்
                                                                                   குப்பைத் தொட்டிக்கருகில்
                                                                                   அழுகிய பிணங்களாய்
                                                                                   கடிதங்கள்
                                                                                   சிதறிக் கிடக்கின்றன.

                                                                                   தனிமையின்இருக்கத்தின்...
                                                                                   சுவர்களெங்கும்
                                                                                   இரத்தச் சிதறல்கள்
                                                                                   எழுத்துகளாய்
                                                                                   சிதறியிருக்கின்றன

                                                                                   காடா விளக்கின்
                                                                                   வெளிச்சத்தில்-இம்முறை
                                                                                   அவன் வெளியே
                                                                                   நின்றிருந்தான்

                                                                                  அவன்
                                                                                  வருவதற்குள்...

                                                                                  கைமணிக்கட்டின்
                                                                                  வழிவந்த
                                                                                  குருதி...

                                                                                  இம்முறை
                                                                                 அவன் கால்களை
                                                                                  நனைக்கட்டும்.

                                                                                 காற்றின் அலைதலில்
                                                                                 பிணவாடை
                                                                                 இன்று
                                                                                 அதிகம்தான்.


                                                                                                                                                            -தோழன் மபா 

Wednesday, 30 November 2011

துளிர்! (கவிதை )





                                               கட்டறுந்து 
                                                                       கிடக்கிறது
                                                                       வாழ்க்கை.

                                                                       வீதியெங்கும்
                                                                       நினைவுகள்
                                                                       காலடிச் சுவடுகளாய்
                                                                       பதிந்து கிடக்கிறது.

                                                                       காற்று
                                                                       வீசும்போதெல்லம்
                                                                       கண்ணில்-நீர்
                                                                       துளிர்க்கிறது.

                                                                       கை கோர்த்து...
                                                                       முகம் பார்த்து...
                                                                       நெருங்கி நடந்து...
                                                                       அருகில் அமர்ந்து...
                                                                       பிரயாணிக்கும்
                                                                       போது....


                                                                       மட்டு மீறி
                                                                       செல்கிறது
                                                                       நட்பு!

                                                                      காலங்கள்
                                                                      திசைகொன்றாய்
                                                                      பிரிபடு
ம் போது...

                                                                      மெல்ல
                                                                      புரிகிறது...
                                                                     
 
                                                                      நட்பு
                                                                      நட்பாய்
                                                                      மட்டும்
                                                                      தொடர்வதில்லை!.


                                                                                                                -தோழன் மபா

Thursday, 24 November 2011

பாரு பாரு நல்லா பாரு !



பாரு பாரு நல்லா பாரு  

 பாலு விக்கிற விலைய பாரு


பஸ்சு போற நிலைய பாரு

ரேட்டு ஏறுன வேகத்த பாரு


பெங்களூரு ஊற பாரு

அம்மா போற ஜோரு பாரு


டாஸ்மாக்கில க்யூவ பாரு

எளைட்டுன்னு ஒன்னு வருது பாரு


குடிச்சிட்டு கிடக்கிற ஆள பாரு -அவன்

பொண்டாட்டி புள்ளைங்க தவிப்ப பாரு


குண்டு(ம்) குழியும் ரோட்ட பாரு

உளுந்து எந்திருச்சி போறான் பாரு


பாரு பாரு நல்லா பாரு!

உன் வேலைய கொஞ்சம் நல்லா பாரு!

இனையதளத்த அப்புறம் பாரு...!


























Tuesday, 25 October 2011

தூறல்!







                                                                                                                                                 

தூறல்!


மழை                                                                                
விட்டப்பின்                                                                  
மரத்தடியில் - நீ                                            


தூறியதென்னவோ      
உண்மைதான்.

ஆனால், 

உலுக்கியது
நான்தானே...!

Wednesday, 2 March 2011

மங்கையர் மலரில் எனது கவிதை!


'மங்கையர் மலர்' மாத இதழ் மார்ச் 8  பெண்கள் தினத்தை முன்னிட்டு  'சக்தி சுடர் 64 ' என்ற சிறிய  இணைப்பை வெளியிட்டுள்ளது.



பெண்மையை போற்றுவோம் என்கிற கருத்தில் கிட்டத்தட்ட் 64  கவிதைகள் இந்த இணைப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் எனது கவிதையும் 'சுரபி' எனற தலைப்பில் வெளிவந்துள்ளது.

இத் தொகுப்பில் பாரதியாரின் தெய்வமன்றோ? கவிதையும், புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் 'பெண்குழந்தை தாலாட்டில்'வரும் 'துலங்கும் பெருமாட்டி'  என்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இத் தொகுப்பில் எனது  கவிதையும்   வெளிவந்துள்ளது.  

 'என்னே... நான் பெற்ற பேரு. அவர்கள் எங்கே....நான் எங்கே....? ' நெஞ்சம் நிமிர்ந்து கவிதையில்  தஞ்சம் கொள்கிறது, தமிழின்பால்...!  

இதில் கவிஞர்  தாமரைகவிஞர்  கலாப்ரியா,   வேலு சரவணன் (நாடகக் கலைஞன்),   நெய்வேலி பாரதிக்குமார்,   சோழ நாகராஜன் பத்திரிகையாளர்,    பாலபாரதி,ச ம  உ.,    பிச்சினிக்காடு இளங்கோ,    எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி,    ராஜாசந்திரசேகர்,   கவிஞர்  நந்தலாலா,   ச.விஜயலட்சுமி, நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ஸ்ரீகாந்த்,   அஜயன் பாலா இயக்குனர் - எழுத்தாளர்,   கண்ணா -ஓவியர்,    நன்மாறன் ச ம  உ.,    பாஸ்கி நிகழ்ச்சி தொகுப்பாளர்,    சாரு பிரபா  சுந்தர்,    அண்ணா கண்ணன் கவிஞர் -பத்திரிகையாளர்,    இராம .குருநாதன்,   சுதீர் செந்தில் உயிரெழுத்து இதழ்,    நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குனர்,    ரத்திகா,   கவிஞர்  பாக்கியம் சங்கர்,  கீதா பிரேம்குமார் தொழிலதிபர், கவிஞர்  திலகபாமாகவிஞர்  தி.ந.கிருபானந்தன்,     சொர்ணபாரதி கல்வெட்டு பேசுகிறது,  சுப்ரபாரதி மணியன் கனவு இதழ்,  தோழன் மபா,     ஏ.ஏ.ஹெச்  கோரி,    பாலு சத்யா,   இயக்குனர் தாண்டவக்கோன்கவிஞர் அன்பாதவன், கவிஞர் கபிலன்,   கொற்றவன்,   ஜெயகுமாரி  தணிகாசலம்,. ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் புதியவன்நடிகை ஊர்வசி, ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன், சக்திஜோதி, 'மேகலை' ராஜேஸ்வரிஅனிதாகுமார்,  சீதா ரவி,  அம்சப்ரியா, பிரளயன் -நாடக ஆசிரியர்,  சமூண்டிச்வரி, எழுத்தாளர் வே.எழிலரசு, ஆதலையூர் சூரியகுமார், வானவன், உமா ஷக்தி, கவிஞர்  இளம்பிறைகவிஞர் மு.முருகேஷ், மதுமிதா, முனைவர் அரங்கமல்லிகா,  லக்ஷ்மி மோகன் சமுக சேவகி, ஸ்ரீ நிவாச ராகவன் போன்ற பெருபான்மையான கவிஞர்கள் இதில் கவிதை புனைந்துள்ளனர்.

கவிதையையும் கவித்துவ உரையையும் சேர்த்துக் கட்டிய மாலையாக 'பெண்மையின் மேன்மையைச்' சொல்லும் அருந்தொகுப்பாக இத் தொகுப் 'பூ'   மலர்ந்துள்ளது.

இக் கவிதைத் தொகுப்பை மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் கவிஞரும் இனையாசிரியருமான அமிர்தம் சூர்யா, அவர்களுக்கு  எனது இதையபூர்வமான நன்றிகள் பல...!

Sunday, 20 February 2011

மாவீரனின் தாய்



மிழன் இனம்


காக்க செந்நீர் சிந்தி


தன்னுயிர் தந்த


தலைமகனை


தன்னிலிருந்து தந்தவள்-அவள்.




அக்கினி குஞ்சாய்


அடைக்காத்து


அகிலம் காக்கும்


'அமிலமாய்' -தன்


வயிறு குடுவைக்குள்


வைரத்தை வைத்திருந்தாள்.




தவமிருந்து தந்தாள்


தமிழனின்


அருமருந்தாய்


பெற்றெடுத்தாள்.
 
 
எங்கள் தலைவன்


பிரபாகரனை-ஈன்ற


இரும்பு மனுஷி


அம்மா 'பார்வதி'




 
 
 
தனக்கென்று


மகனை


தன்னில் வைக்காமல்


'தமிழீழ' விடுதலைக்காக


தரணிக்குத் தந்தவள்


எங்கள் தாய்.




'மண்ணும் மனமும்


எங்களுக்குச் சொந்தம்


வந்தேரி 'நாயே'


வாலை ஆட்டாமல் போ...'


என்று வீர முழக்கமிட்ட


மாவீரனின் தாய்!




"பார்த்துப் போப்பா...


பார்த்து வாப்பா..." என்று


பிற தாய்மார்கள் தங்கள்


பிள்ளைகள் மேல்


பாசம் பொழிவார்கள்.


பதறித் துடிப்பார்கள்.




இவள் பெற்றதை -இன


விடுதலைக்கு தந்தாள்


பாசத்தை- தன்


இதயத்தில் வைத்தாள்.






இதயத்தை


இரும்பாக்கிக் கொண்டு


இரங்கற் 'பா' பாடுகிறேன்...


 
பட்டதுயரம்


போதுமென்று


இறந்தாயோ...


 
அம்மா...




பாவி இவர்களை


நம்பினால்




கெட்டக்குடி


இன்னும் கெடுமடி


என்று பறந்தாயோ!


 இல்லை...




விடுதலை இன்னும்


விடியவில்லை


வேலிக்குள் வாழ்வு


சகிக்கவில்லை




தமிழன் தலை நிமிர



தன்னுயிர் தந்தவனை



மீண்டும் தன்னில்



சுமந்துவர



சென்றாயோ...






அம்மா எங்கள்


அம்மா


மாவீரர்களின் 'தாயே'






நீ


மீண்டும்


உயிர்த்தெழும் போது


உன் கருவறை


'மாவீரன் பிரபாகரனை'


மீண்டும் சுமக்கட்டும்!!!













Monday, 7 February 2011

'தையல்' மெஷின்

எனது கவிதை...!
நீ

மானுடப் பாதையின்


தொடக்கமென்று-நான்


உரைத்திடும் வேளையில்...


உன் உதிரத்தின்


கடைசித் துளிவரை


சுவைத்தான்


 'கார்பெரேட்' மனிதன்.


'ஏவாள்' கரம் பற்றி-அன்று


நான்


சொன்னதுதான்...நீ


'தையல்' மெஷின்?!

Friday, 28 January 2011

கீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்


இது

மௌனம்
தூங்கும் நேரம்

வானத்தின்
விஸ்வரூபத்தில்- பூக்கள்
நட்சத்திரங்களோடு
மலர்ந்துக் கிடந்தன

அந்த ஏகாந்த
இரவின் குளிர்ச்சியில்
பனித்துகள்கள் போர்வைக்குள் 
ஒடுங்கிக்கிடந்தன

கைகளுக்குள்
சிறைப்பட்ட
முழு நிலவில்
மலைகளும்
பள்ளத்தாக்குகளும் -என்
கைகளுக்குள்
அடைப்பட்டுக் கிடந்தன!

தென்றலுக்கு
வியர்த்த நொடியில்
எனது கரங்கள்
அன்னிச்சையாய்
கை குட்டையைப்
பற்றின...

ஒற்றியெடுத்த
வியர்வைத் துளியில்
'நீர்' வெள்ளமாய்
'சூல்' கொண்டிருந்தது.

இரவு
எந்தவித
வெளிச்சமுமின்றி
இருட்டில்
தவித்துக் கிடந்தது!

எனது ஒற்றை
மெழுகுவர்த்தியின்- ஒளியில்
சந்திரன் -பால்
வெண்மையாய் பிரகாசித்தது.

நீண்டு கிடந்த
வெட்டவெளியில்- பாதை
வளைந்து நெளிந்து
தனிமையில்
பிரயாணம்  செய்தது...

குளிர் நிறைந்த
குளத்தில்மீன்கள்
மூச்சையடக்கி
 நீச்சல் பழகின...

பகலில்
குளிர்தாங்காமல்
'தீ 'மூட்டி
குளிர்காய்ந்த சூரியன்

வெதுவெதுப்பான
தடாகத்தில் -தன்
ஆடைகளைந்து
வெப்பம் -தீர
குளித்து எழுந்தது.

முன்னுக்கு பின்னாய்
முரன்பட்ட கவிதை வரியில்

எனது
எழுத்துக்கள்
காகிதத்தை - கிழித்து
கீழே சிதறி கிடக்கின்றன...

முடிந்தால்
கண்களால்
அள்ளிக்கொள்ளுங்கள். 

Sunday, 23 January 2011

அவளி'டம்' விற்பனைக்கு




  •  








புழுதி படர்ந்த  -அந்த
ஒற்றையடிப் பாதையில்
மலைகலெனத்- தன்
மார்புத் திறந்து -பல
யுகங்களாக -அவள்
படுத்திருந்தாள்.



கசிந்து ஒழுகிய
முலை காம்புகளில் 
வியர்வை அரும்பி
உப்புப் பூத்திருந்தது,
கால்களின் இடுக்குகளில்
மனித கைகளின் 
'ரேகைகள்'
அழுக்குப் படிந்து
அப்பியிருந்தன...
 

விலை கூவி... 
விற்க -அவள்
சம்மதம் தேவையில்லை
என்றானபோது...

நாயும் புணர்ந்தது...
நரியும் புணர்ந்தது...
 

காப்பாற்றுவார் யருமின்றி
அவள் உடல்கள் எங்கும்
எல்லைகள் பிரிக்கப்பட்டு
வேலியிடப்படிருக்கின்றன....
விலையும்
குறிக்கப்பட்டிருக்கின்றன.
 

முக்கி முனகினாலும்
கதறி அழுதாலும்
காலை குறுக்கி
'குறி'
காட்டமறுத்தாலும்

வன்புணர்வுச் செய்து-அவளின்
சதை  விற்றான்
'ரியல்' மனிதன்!?


செழுமை பூத்து
விளைந்திருந்தாலும் -எங்கோ
வனாந்திரத்தில் மறைந்திருந்தாலும்
அவனின் கண்பட்டுவிட்டால்...
அங்கே முளைத்திருக்கும்
ஒரு அடுக்குமாடி
குடியிருப்பு!



இனி அவள்
விளை நிலங்களா
இல்லை
விலை நிலங்களா? 

 
அவள் 
எங்கேயாவது 
தனிமையில் - தனது
ஆடைகளைக் களைந்து
விஸ்தாரமாக -
படுத்துக்கிடந்தால்...




அடுத்த நாள்
பத்திரிகைகளில்
அரைப்பக்கம்  விளம்பரம்
'இடம் விற்பனைக்கு'
என்று...!?



****

Thursday, 23 December 2010

ஒரு பகல் நேரத்தில்...

!!!!!கவிதை!!!!!!


நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.


பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.


மேஜையில்
இருந்த
பூச்-ஜாடியும்
அப்படியே
இருந்தது.


கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.


டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.


இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,


அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...


அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?

-தோழன் மபா

*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.